ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

முயல் வேட்டை -ஒரு பழங்கதை








                                                              கையில் முயல்


[ இப்படங்கள்  அண்மையில் நடந்த ஒரு சிறு வேட்டையின்போது எடுக்கப்பட்டது.]


பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறை பரபரப்பானதாக பல்சுவைகளும் நிரம்பியதாக இருந்தது,ஆதித் தமிழரின் வரலாற்றினை ஆழ்ந்து கவனிக்கும் போது அவர்கள் கிடைத்தற்கரிய பேறான இந்த மனிதப் பிறவியின் மகத்துவத்தையும் உலக வாழ்வின் மாண்பையும் மிக நன்றாக உணர்ந்திருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

அதனால் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி அனுபவித்து வாழ்ந்தார்கள்.இயலும் இசையும் நாடகமும் அவர்களின் வாழ்வோடு இணைந்து பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து கிடந்தன,

நாற்று நடவு , வயலுக்கு நீர் இறைத்தல் , குழந்தைக்குத் தாலாட்டு , மரித்தோருக்கு ஒப்பாரி என்று வாழ்க்கைப் போராட்டத்தையே அவர்கள் இசை மயமாக்கி இனிதே வாழ்ந்தார்கள்.

கலைகளுக்கு இணையாக அவர்கள் வாழ்வில் விளையாட்டும் முக்கியத் துவம் பெற்றிருந்தது.உடல்நலம் பேணும் வகையிலும் அறிவைத் தூண்டும் வகையிலும் சிந்தனையைச் சீர்படுத்தும்  வகையிலும் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த விளையாட்டுகள் ஏராளம். அவைகளெல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன என்பதை இங்கே மிக்க வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

எனினும் எமது வாழ்க்கைக் காலத்தில் அவைகளில் எஞ்சியிருந்த சிலவற்றைக் காணவும் கலந்து கொள்ளவும்  நேர்ந்த வாய்ப்பினை எம் காலம் வரைக்கும் எம்மால் பெருமிதத்தோடு நினைவு கூற இயலும்.

இந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த விளையாட்டுகளில் ஒன்றான ' வேட்டை ' யில் யான்  பெற்ற நேரடி அனுபவத்தைக் கொண்டு  அதைப்பற்றி இங்கே பதிவிட விழைகிறேன்.

முன்பே குறிக்கப்பட்டிருந்த ஒரு  நாளில் கிராமத்து ஆண்கள் குழுவாகத் திரண்டு தங்களின் நாய்களையும் அழைத்துக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடப் போவதைத்தான் 'வேட்டைக்குப் போவது ' என்று சொல்வார்கள்.விலங்குகள் என்று இங்கே சொல்லப்படுவது தற்காலத்தில் 'முயல்'களேயன்றி வேறொன்றுமில்லை.

அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். விடுமுறையில் வீட்டிலிருந்த ஒரு சமயத்தில் ஊர்க்காரர்கள் ' வேட்டை, வேட்டை' என்று எப்போதும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்ததைக்கேட்டு  அந்த ஆர்வம் கிளர்ந்தெழுந்தது.

 பண்ணை வேலைகளைக் கவனித்துக் கொள்வதற்காக 'சக்திவேல்' என்ற எங்களின் ' மச்சான் ' ஒருவர்  எங்கள் வீட்டில் இருந்தார்.;[ இவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்ததை ' மணிமாறன் மாமா கதை சொன்னார் ' பக்கங்களைப் படிக்க நேர்ந்திருந்தால் கவனித்திருக்கலாம்.]

இவர் 'மோட்டார்' என்று ஒரு நாய் வளர்த்தார்.அந்தக் காலத்தில் 'காரை' மோட்டார் என்றுதான் அழைத்தார்கள். அந்த மோட்டார் போல இந்த நாய் வேகமாக ஓடியதால் நாய்க்கு மோட்டார் என்று பெயர். இந்த மோட்டாருக்கு சிறப்புச் சாப்பாடு கொடுத்து ஆழமான குளத்தில் நீந்த வைத்து மச்சான் விசேசப் பயிற்சிகள் கொடுத்ததைப் பார்த்து வேட்டையில் நானும் கலந்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன்.

' காட்டுக்குள்ள முள்ளுல நடப்பியா ..? ' என்று கேட்டு விட்டு கூட்டிப் போவதாக ஒத்துக் கொண்டார்.

அந்த நாளும் வந்தது.

அன்று ஒரு ஊர் இல்லை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு கிராமத்து வேட்டைக் காரர்கள் கூடினார்கள்.அந்தக் கூட்டம் காட்டுக்குள் புகுந்து கிராமங்களைத் தாண்டிச் சென்றபோது மேலும் மேலும் ஆட்கள் சேர்ந்து இறுதியாகச் சுமார் முன்னூறு பேர்களும் நூறு நாய்களுமாகத்  திரண்டது.

இங்கே காடு என்று சொல்லப்படுவது மழைக் காடுகளோ அல்லது மலைக் காடுகளோ அல்ல.சில மரங்களும் குட்டைப் புதர்களுமானவைதான் அவை. அந்த நாய்கள் தாம் எங்கே போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு  இயல்புக்கு மாறாக அன்று  மிக ஆக்ரோஷமாக இருந்தன.

வேட்டைக்காரர்கள் 'வேட்டைகம்பு ' என்ற இரும்புப் பூண்கள் போட்ட கைத்தடிகளையும்  'குத்துக்கம்பு' என்று சொல்லப்பட்ட ஈட்டி செருகிய நீண்ட கழிகளையும் ஆயுதமாக வைத்திருந்தார்கள்.

ராணுவப் படையினர் ' Combing operation ' செய்வதைப் போல நீண்ட வரிசையில் சென்ற அவர்கள் குத்து கம்பால் புதர்களைக் கலைத்தார்கள்.பதுங்கியிருந்த முயல்கள் பயந்து வெளியே பாய , வேட்டைக்காரர்கள் கூச்சலிட்டபடி பிடித்திருந்த நாய்களை அவைகளை நோக்கி ஏவி விட , முரட்டுப் பாய்ச்சலில் விரட்டிச் சென்ற நாய்கள் முயல்களை நெருங்கி காலால் தட்டி விடுகின்றன. தடுமாறி உருளுகின்ற முயல்களைக் கவ்விப் பிடித்துக் கொண்டு எஜமானர் ஓடிவந்து எடுத்துக் கொள்ளும்வரையில் காத்திருக்கின்றன.

அங்கேயோ அல்லது வேட்டை முடிந்ததுமோ நாய்களுக்கு முயலின் குடலும் கழிவு மாமிசமும் சாப்பிடக் கிடைக்கின்றன.

நாய்கள் ஒரு முயலைத் துரத்திச் சென்றால் நாய்களைக்  கம்பு தாக்கிவிடலாம் என்பதற்காக வேட்டைக்காரர்கள் வேட்டைக்கம்புகளை வீசுவதில்லை. இப்படி ஒரு முறை நடந்து இரண்டு ஊர்களுக்கிடையே பெரிய கலவரம் நடந்ததாகச் சொன்னார்கள்.

அப்படியில்லாமல் கூட்டத்தைக் கண்டு மிரண்டு எங்கிருந்தோ ஓடிவருகின்ற முயல் ஒன்று கண்ணில் பட்டால் அதை நோக்கிக் குறிபார்த்து  வேட்டைக் கம்புகளை வீசுகிறார்கள். முயல்கள் சுருண்டு விழுகின்றன. 

பெரும்பாலும் அனுபவம் மிக்க சிறப்புத் திறமை கொண்டவர்களே இந்தக் கம்புகளை வீசுகிறார்கள்.நமது சக்திவேலும் அதில் ஒருவர்.அதனால் அவருக்கு மற்றவர்களை விட அதிகமாகவே வேட்டை கிடைத்தது.

முயல்கள் மட்டுமல்லாமல் நரிகளும் பாம்புகளும் புதர்களுக்குள்ளிருந்து 
புறப்பட்டுப் பாய்கின்றன.ஆனால் அவைகளை யாரும் கண்டுகொள் வதில்லை.

வழியிலிருந்த சிற்றோடைகளிலும் குளங்களிலும் வேட்டைக்காரர்கள் தண்ணீர் குடித்தார்கள்.மாலை ஐந்து மணி போல வேட்டை நிறுத்தப் பட்டது.ஏதேனும் ஒரு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டது.சிலர் எங்கோ சென்று சமையல் பாத்திரங்கள் இரவல் வாங்கி வந்தார்கள்.சிலர் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று அரிசி ,சமையல் பொருட்கள் வாங்கி வந்தார்கள்.

 பனை ஓலையில் செய்யப்பட ' பட்டை ' எனச் சொல்லப் படுகிற  ஒருமுறை பயன்படுத்துகிற use & through சாப்பாட்டுப் பாத்திரங்கள் தயாராக முயல் கறியோடு சாப்பாடு நடந்தது. அடுத்த வேட்டைக்கான நாளும் அங்கேயே முடிவு செய்துகொள்ளப் பட்டது.எல்லோரும் அங்கேயே தூங்கி எழுந்து மறுநாளும் வேட்டை தொடருமாம்.

ஆனால் என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் எனக்காக சக்திவேல் மச்சானும் ஊருக்குக் கிளம்பினார்.அவர் புறப்பட்டதும் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே கிளம்பிவிட்டார்கள்.

ஊரை நெருங்கியதும் வேட்டை முயல்கள் எல்லாவற்றையும் இறைச்சியாக்கி கூடக் குறைய என்ற வேறுபாடு எதுவுமில்லாமல் எல்லோரும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டார்கள்.அன்று இரவு மச்சான் எங்கிருந்தோ ரகசியமாகச் சாராயம் வாங்கிவந்து குடித்துவிட்டு முயல் கறி சாப்பிட்டார்.

இப்போது இதெல்லாம் பழங்கதையாகி விட்டது.அரசாங்கம் வேட்டைக்குத் தடை போட்டுவிட்டது. தடையை நீக்கினாலும் கூட எங்கள் கிராமத்து ஆண்களுக்கு வேட்டைக்குப் போக விருப்பம் இல்லாத அளவுக்கு அவர்களின் சிந்தனையையும் நேரத்தையும் அரசாங்கத்தின் டாஸ்மாக் கடைகள் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன.

காட்டில் முயல்கள் மட்டுமில்லாமல் இப்போது நமது தேசியப் பறவையான மயில்களும் பல்கிப் பெருகி விட்டன.


















2 கருத்துகள்: